தற்கொலை
ஓரளவு பொது சிந்தனை உள்ள அனைவருக்குமே "தற்கொலை" என்ற வார்த்தையை கேட்கும் பொழுதே மனவேதனையும் கோபமும் வருவதுண்டு.
சுமார் 10 / 12 வருடங்களுக்கு முன்புவரை கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டும், வாழ்க்கையின் தோல்வியாலும், துரோகத்தாலும், விரக்தியாலும், ஏமாற்றத்தினாலுமே பெரும்பாலும் கொலைகளும், தற்கொலைகளும் நடந்தன (என்ன காரணமானாலும் திருவிளையாடல் நக்கீரர் சொல்வது போல் தவறு தவறுதான்).
ஆனால் இன்றோ...... கொலைகள் கார்பொரெட் பிஸ்னஸ் போலவும், தற்கொலைகள் சிறுப்பிள்ளை விளையாட்டாகவும் மாறிவிட்ட அவலநிலை..
பள்ளி, கல்லூரி மாணவர்களும்; பத்து பனிரெண்டு வயது சிறார்களும் தற்கொலை செய்துகொள்வது நம் சமூகம் எந்த அளவிற்கு தன்னம்பிக்கை இல்லாதவர்களாக குழந்தைகளை வளர்க்கிறோம் என்பதை அப்பட்டமாக காண்பிக்கிறது..
அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல் ஒருவேளை அதீத எச்சரிக்கையுணர்வோடு பாதுகாப்பதாக நினைத்துக்கொண்டு அவர்களை நம்மையும் அறியாமல் தன்னம்பிக்கையில்லா கோழைகளாக வளர்கின்றோமோ???
சுமார் மூன்று மாத காலத்திற்குள் நம் தமிழகத்தில் மட்டுமே 10 பத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்டார்கள். இதனை மாற்ற நம்மால் முடிந்த எதனையாவது செய்தே ஆக வேண்டும். அது நம் கடமையும் கூட.
என்ன செய்யலாம்?
இதற்காக கண நேரத்தில் தப்பான முடிவெடுப்பவரை தேடி, நம் பிழைப்பை விட்டு அலையவும் முடியாது அது சாத்தியமும் அல்ல ஆனால் நம்மால் செய்யகூடிய ஒன்று உள்ளது. அது என்ன?
வாழ்க்கையில் பல விஷயங்களை எதிர்கொண்டு போராடி வென்றதோடல்லாமல் இன்று என்னுடைய வலைபக்கத்தை (blog) படிக்கும் அளவிற்கு தைரியம் கொண்ட நீங்கள் உங்களுடைய தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அடுத்தவர்களிடம் பரப்பவேண்டும் ஏனென்றால்...,
சந்தோஷமோ / துக்கமோ ஒருவர் பகிர்ந்து கொள்ளும் பொழுது நம்மை அறியாமல் அந்த சூழலை இலகுவாகவோ / இறுக்கமாகவோ மாற்றுகிறோம். இதனை ஒரு துக்கவீட்டயோ அல்லது ஒரு குழந்தையின் பிறந்தநாள் விழாவையோ நினைத்து பார்த்து புரிந்துக்கொள்ளலாம்.
எனவே அடுத்தவர்களிடம் பேசும் பொழுது கொஞ்சநாளைக்கு தன்னம்பிக்கையோடும், அவர்களை உற்சாகபடுத்தும் விதமாகவும், சந்தோஷத்தோடும் பழகுவோமானால் சிறிது காலத்திற்கு பிறகு அது நம் இயல்போடு (character) ஒன்றிவிடும், இதனால் அடுத்தவர்களுக்கு தன்னம்பிக்கை தருவதோடு மட்டுமின்றி அது நமது முன்னேற்றத்திற்கும் பல வகையில் உதவும் என்று நான் கருதுகிறேன்.
____________________________________________
இந்த 21 ஆம் நூற்றாண்டில் அறிவின் ஆற்றல் மிகுந்தவண்ணம் எல்லா துறைகளிலும் பலவகையான அறிய கண்டுபிடிப்புகளால் நம் மனிதகுலத்தின் வாழ்வியலில் மேன்மையும் வேகமும் பெற்று வளர்ச்சியடைந்துள்ளது. உடலுறவின்றி அறிவியல் துணைகொண்டு புது ஜீவனை (குழந்தை) கூட பெற்றுக்கொள்ள முடிகின்றது.
ஆனால் என்றும் மாற்ற முடியாததொன்று உண்டென்றால் அது ஒவ்வொரு ஒவ்வொரு பிறப்புக்கும் உள்ள இறப்புதான்..
என்னவிலை கொடுத்தாலும், எத்தனை முயற்சி செய்தாலும், இன்னொரு உயிரையே தந்தாலும் மீட்கமுடியாதது உடலைவிட்டு பிரிந்த உயிர்தான். அத்தகைய இன்னுயிரை கொல்வதே இவ்வுலகத்தில் உள்ள மிக கொடுமையான, திருத்தமுடியாத தவறான செயல் என்பது எனது அபிப்பிராயம். எந்த ஒரு உயிரையும் எடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லையென்பது தன் சொந்த உயிர்க்கும் சேர்த்துதான் என்பதை அனைவரும் உணர்ந்துக்கொள்ளவேண்டும்.
வாழ்க்கை என்பது என்ன?
நாம் கருவில் உருவான நாள் முதல், நம் இன்னுயிர் உடலைவிட்டு பிரியும் நாள் வரை பிரச்சினைகளை எதிர்கொண்டு வாழ்வதே வாழ்க்கை ஆகும்.. இன்னும் எளிமையாக சொல்வதென்றால்..
ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒரு தனி கணித புத்தகம் (Maths Book) போன்றது. எப்படி?
- கணக்கு புத்தகத்தில் முதலில் முதல் பாடத்தில் உள்ள விதிமுறைச்சொல் (FORMULA) தெரிந்து கொள்கிறோம், பிறகு மாதிரி கணக்குகளை கண்டு (sample problems) எவ்வாறு விதிமுறைச்சொல் பயன்படுத்தப்படுகிறது என்பதை புரிந்து கொள்கிறோம். இப்பொழுது நமக்குரிய பிரச்சினைகளை (Exercise-problems) நாம் எதிர்கொள்ள வேண்டும்.
- இந்த வகையில் ஒரு கணக்கை (பிரச்சினையை) முடித்ததும் அந்த வேகத்திலேயே சம்மந்தப்பட்ட பாடத்தில் உள்ள அடுத்தடுத்த கணக்குகளையும் (பிரச்சினைகளையும்) முடிக்கிறோம். அடுத்தது இதவிட சற்று கடினமான பாடம் (விதிமுறைச்சொல்) அதனுடைய பிரச்சினைகள் (கணக்குகள்) என்று தொடர்ந்துக்கொண்டே அந்த புத்தகம் முடியும் வரை பயணிக்கிறோம். இதில் நமக்கு கிடைக்கக்கூடிய லாபம் என்ன.....?
- பல விதிமுறைகளையும், அதன் புரிதலையும், சம்மந்தப்பட்ட பிரச்சினைகளையும் தெரிந்து கொள்வதோடு அதற்கு சரியான தீர்வையும் காண்கிறோம். இது நம்மை வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது (like moving to 1st std maths to 2nd std maths).
- நம் வாழ்க்கைத்தரம் உயர்ந்தாலும் அங்கும் நாம் முன்பு கண்ட அதே முறைகளில் தான் பயனிக்கபோகிறோம்.
- எனவே கணக்கில் எவ்வாறு 1ஆம் வகுப்பிலிருந்து முதுகலை படிப்புவரை பாடங்களும், விதிமுறைகளும், பிரச்சினைகளும், அதன் கையாளும் விதமும் வெவ்வேறாக இருக்கிறதென்றாலும்... அவர்கள் புதிய விதியை (FORMULA) கண்டுப்பிடித்தாலும் அதனை நான்கு எளிய அம்சங்களை கொண்டே தீர்வை நோக்கி செல்ல இயலும் அது (+ - x /) கூட்டல், பெருக்கல், வகுத்தல், கழித்தல் எனும் நான்கு விதியே....
- வாழ்க்கையும் இதைப்போலவே பிரச்சினைகளும், அதனை எதிர்க்கொள்வதும், தீர்வு காண்பதும் அடுத்த பிரச்சினையை நோக்கி செல்வதுமேயாகும். இதனை கையாள அடிபடைத்தேவையானது (like + x / - in maths) சிந்தனை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் அன்பு.
நம் வீட்டிலோ அல்லது சுற்றத்திலோ உள்ள ஒரு எட்டு மாத குழந்தையை நோக்கி நம் கவனத்தை வைப்போம்: தவழும் குழந்தை தட்டுத்தடுமாறி நிற்பதற்கும், நடப்பதற்கும் நடுவில் இந்த குறிப்பிட்ட ஆறு மாத காலத்தில் பல நூறு முறைகள் கீழே விழுந்து, எழுந்து பின் விழுந்து, எழுந்தே நடைபயின்றிருக்கும் இவ்வளவு ஏன்? நம்மையே எடுத்துக்கொள்ளுங்கள்.........
நாமே 30 லட்சத்திற்கும் அதிகமான விந்தணுக்களில் இருந்து போராடி வென்ற தனிச் சாதனையாளர் தானே; மற்றும் நாமும் மேற்கூறியபடி போராடித்தானே நடை பயின்று, மொழி பயின்று, உண்ண, உடுத்த என்று ஏதும் அறியா விந்திலிருந்து இந்நாள்வரை சாதித்துக்கொண்டிருக்கிறோம்....
இனியும் சாதிப்போம் மற்றவர்களையும் சாதிக்கவைப்போம்..:)
இனியும் சாதிப்போம் மற்றவர்களையும் சாதிக்கவைப்போம்..:)